இந்தியக் கடற்படை தினம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்தியக் கடற்படை தினம்
அரண் என்றால் பாதுகாப்பு என்பது பொருள். இதனைத் திருவள்ளுவர், " அகத்தாருக்குத் தேவையான எல்லாம் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவி காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய் விளங்குவதே அரண்" என்கின்றார். 'எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண் ( குறள் : 746 ).
இவ்வளவு ஏன்? "முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்" என்னும் குறளின் மூலம் அதாவது, சூழ்ந்து முற்றியும் திடீரெனத் தாக்கியும் வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும் பகைவரால் கைப்பற்றுவதற்கு இயலாத அருமையுடையதே அரண் என்று 'பாதுகாப்பின் வலிமையை உணர்த்துகிறார்.
முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையில் வாயிலிலேயே அழிந்து போகுமாறு, போர்த்தொழிலில் வீறு பெற்றுச் சிறந்த காவல் மறவர்களையு,ம் கொண்டதே அரண் என்னும் கருத்தினை, "முனைமுகத்து மாற்றலர் சாய் வினைமுத்து வீறெய்தி மாண்ட தரண்" என்று பாதுகாப்பைப் பற்றி மேலும் சிறப்பிக்கிறார், திருவள்ளுவர்.
கடல், கப்பல், கடற்படை, கடல் பயணம் என்னும்பொழுது நாம் சற்றுப் பின்னோக்கிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இவை புதியனவல்ல, இந்தியாவிற்கு ! குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு!!!
இந்தியாவின் கடல் சார்ந்த வாணிகமானது கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே இருந்ததை அறியலாம். மௌரியர்கள், சோழ மன்னர்கள், விசயநகர மன்னர்கள், கலிங்க மன்னர்கள், மொகலாய மன்னர்கள் ஆகியோர் கடற்படைகளைக் கொண்டிருந்தனர். அவற்றால் அயல்நாட்டு வணிகத்திலும் கடல் சார்ந்த செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கினர். கரிகால் சோழன் கொண்டிருந்த கடல் வாணிகம், உலக நாடுகளில் தமிழ் நாட்டின் பெருமையை நிலைநாட்டியதைப் பட்டினப்பாலை வழி அறியலாம்.
இந்தியா, ஒரு தீபகற்ப நாடு. தீபகற்ப நாடு என்றால், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது என்று பொருள். அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய கடல்கள் இந்தியாவைச் சூழ்ந்துள்ளன. எனவே, கடலோரப் பாதுகாப்பிற்குச் சிறப்பான கவனம் தரவேண்டியுள்ளது.
சிறப்புகள் :
1. 1947 முதல் இந்தியக் கடற்.படை செயல்படுகிறது.
2. அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் செயல்புரிகின்றனர்.
3. உலகின் ஐந்தாவது கடற்.படை.
4. நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதில் மிகச் சிறப்பான செயல்பாடு. ( முப்படைகளுள் ஒன்றான கடற்படை )
நமது கடற்படை மண்டலங்கள் : 4. அவையாவன :
கிழக்கு - விசாகப்பட்டினம்
மேற்கு - மும்பை
தெற்கு - கொச்சி.
தொலைதூரக் கிழக்கு - போர்ட் பிளேர்
பணிகள்
1. நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாத்தல்.
2. மற்ற இராணுவப் பிரிவினருடன் இணைந்து போர் மற்றும் அமைதி ஆகிய காலகட்டங்களில் எல்லைகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களை, ஆக்கிரமிப்புகளை முறியடித்தல்.
3. கடலோரப்பகுதிகளின் நல்ல நிலைப்பாட்டினையும் ஒழுங்கினையும் ஏற்படுத்துதல்.
4. தன் செயல்பாடுகளால் சர்வதேசஉறவுகளை மேம்படுத்துதல்.
5. துறைமுகங்களைக் கண்காணித்தல்.
6. பேரிடர் நேரங்களில் மக்களை மீட்டல் முதலான நிவாரணச் செயல்பாடுகளில் ஈடுபடுதல்.
7. கடற்கொள்ளைகளைத் தடுத்துக் கப்பல்களைக் காத்தல்.
இந்தியக் கடற்படை என்ற நிலையை அடையும் முன் ... இந்தியா, குடியேற்ற நாடு என்னும் நிலை வந்தபொழுது ( 1830 ) ஹெர் மேஜெஸ்ட்டிஸ் இண்டியன் நேவி என்ற பெயரில் பிரிட்டிஷ் இந்தியக் கடற்படை, பிரிட்டிஷ் நாட்டினரால் நிறுவப்பட்டது.
இந்தியக் கடற்படைக்கு ஆதரவாக இந்திய விமானப்படையும் கரையோர பாதுகாவல் பணிகளில் ஈடுபடுகிறது
செயல்பாடுகள் - ஆபரேஷன்ஸ்
1971 திரிசூலம் செயல்பாடு - பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தது, இந்தியக் கடற்படை
பைத்தோன் செயல்பாடு - தொடர்ந்து நடத்திய பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தது, இந்தியக் கடற்படை
1988 - ஆபரேஷன் காக்டஸ் - மாலத்தீவின் கப்பலைக் கடத்திய ப்ளோட் போராளிகளிடமிருந்து அக்கப்பலை இந்தியக் கடற்படை மீட்டுத் தந்தது ).
1999 அக்டோபர் - கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட ஜப்பானின் கப்பலை மீட்டுத் தந்து உதவியது.
1999 - 2001 - தல்வாரி செயல்பாடு _ கார்கில் போர் ( இந்தியக் காலாள்படையினருடன் இணைந்து செயல்பட்டு பாகிஸ்தானிடம் இருந்து இந்திய நாட்டைக் காப்பாற்றியது.
2001 - 2002 - இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே சுமுகமான நிலை இல்லாததால், முப்படையின் ஒருங்கிணைந்த திட்டத்தில் இந்தியக் கடற்படையும் அணிவகுப்பில் போர்க்கப்பல்களை நிறுத்திப் பங்கேற்றது.
2001 - எண்ட்யூரிங் ஃப்ரீடம் செயல்பாடு : ஐக்கிய நாடுகளின் போர்க்கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்தது.
இன்னும் இதுபோன்ற பல செயல்பாடுகளின் மூலம் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து வருகிறது, இந்தியக் கடற்படை!. சுனாமியின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேளிநாடுகளிலிருந்து சென்ற முதற் கடற்படை இதுவே என்ற சிறப்பினையும் பெற்றுள்ளது.
இந்தியக் கடற்படை நவீன தொழில் நுட்பங்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
பிரம்மோஸ் ஏவுகணையானது, இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப, வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வடிவமைப்பில் உருவான பொருள்களும் தொழில்நுட்பங்களும் பெரும்பாலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எரிசக்தியைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள், போக்குவரத்துக் கப்பல்கள் மற்றும் கப்பல்களிலிருந்து தாக்கும் அமைப்பு முறைகளும் அடங்கும். மேலும், நிலத்தில் துல்லியமாகத் தாக்கும் திறனை இந்தியக் கடற்படைக்குப் பிரம்மோஸ் அளித்திருக்கிறது.
பிரம்மோஸ் சூப்பர் ஸோனிக் கப்பல் ஏவுகணை போன்றவை பாதுகாப்பு ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க இலக்கை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுத் தயாரிப்பு ஏவுகணைகள் இந்தியாவிடம் இருந்தாலும், 'நிர்பே' என்னும் கப்பல் ஏவுகணை அமைப்பைச் சொந்தமாக உருவாக்கி வருகின்றது. இந்தியா, தனது இராணுவ நவீனமயமாக்கலுக்கு விமானங்களை வாங்கி ( பெரும்பாலும் இந்தியக் கடற்படைக்காக ) இதனுடன் இணைக்கிறது.
நீர்மூழ்கிப் படை மற்றும் ஆளில்லா இயங்கும் ( நீருக்கடியில் ) வாகனம் போன்ற புதிய தொழில் நுட்பங்களை உருவாககுவதில் முனைப்பாக உள்ளது.
21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள இந்தியக் கடற்படை, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தையும் சார்ந்துள்ளது. இந்தியக் கடற்படையில் உள்ள கப்பல்கள் மற்றும் கப்பல் தளங்கள் மாகியவற்றின் பெயர்கள் இந்தியன் நேவல் ஸ்டேஷன் ( INS ) என்று தொடங்கியே அமையும்.
ஐ. என். எஸ். சக்ரா, ஐ. என். எஸ். ஜலஷ்வா, ஐ. என். எஸ்.விராட், ஐ. என். எஸ். விக்ராந்த் போன்று அமையும்.
ஐ.என்.எஸ். ஜலஷ்வா ஐ.என்.எஸ். ஐராவத்
நம்மிடம் உள்ள கப்பல் வகைகள் :
போர்க்கப்பல்கள்.
வழித்துணைக்கப்பல்கள்
நீர் மற்றும் நிலம் இரண்டிலும் செயல்திறன் கொண்ட போர்க்கப்பல்
விமானம் தாங்கிக் கப்பல்கள்.
நீர்மூழ்கிக் கப்பல்கள்.
டீசல் நீர்மூழ்கிக் கப்பல்கள்.
ஆளில்லாத நீர்மூழ்கிக் கப்பல்கள்.
அணுசக்தியால் உந்தப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள்.
கப்பலை உடைக்கும் திறன் கொண்ட வெடிகுண்டைத் தங்கிச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்கள்.
மேற்பார்வையிடுதல்
கடற்படையை மேற்பார்வையிடும் அதிகாரம் இந்திய ஜனாபதிக்கு உண்டு. ஏனென்றால், அவர்தான் இந்திய இராணுவத்தின் முதன்மைத் தளபதி ஆவார். மேற்பார்வையிடுதல் என்பது ஜானாபதியின் பனிக்காலத்தில் ஒரு முறை நடைபெறுவது ஆகும். இதன்படி, டாக்டர் இராஜேந்திர பிரசாத் ( 1953 )அவர்கள் தொடங்கி டாக்டர் அப்துல் கலாம் ( 2006 ) அவர்கள் வரை ஒன்பது கடற்படை மேற்பார்வையிடுதல்கள் நடந்துள்ளன.
கடற்படைப் பயிற்சிகள்
இந்தியா, பிற நாடுகளுடன் இணைந்து கப்பல் பயிற்சிகளை வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்கிறது. இதனால்,
I ) பிற நாடுகளுடனான இயக்கத்தை அதிகரிக்கிறது.
II ) ஒன்றுசேர்ந்த கூட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறது.
இதற்காக இரஷ்யா, சீனா, ஜப்பான், வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ் குறிப்பாக ஜெர்மனி, குவைத், ஓமான், சவூதி அரேபியா முதலான நாடுகளுடன் பயிற்சியினை மேற்கொள்கிறது. அதேபோன்று இந்தியக் கப்பல் படைகள் மேற்கண்ட நாடுகளுக்கும் சென்று வந்துள்ளன. நல்லுறவை வளர்க்கும் பொருட்டும் மாவு நோக்கின்பொருட்டும் கப்பல்கள் சென்று வருகின்றன.
சாதனைகள்
1. எவரெஸ்ட் சிகரத்தின்மீது கடற்படைக் கொடி பறக்கவிட்டது.
2. எவரெட் சிகரத்தின் வடமுகத்தையும் கடந்து சென்றமை. ஆல்ப்ஸ் மலைச்சிகரம், பாதக்கோனியா உள்ளிட்ட பல்வேறு மலைச்சிகரங்களில் இப்பயணம் மேற்கொண்ட கமாண்டர் சத்யப்பிரதா தாம் ஏறியுள்ளமை . ( இச்சாதனையை, இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை )
3. ஆர்க்ட்டிக் சர்க்கிள் பனிப்பாறைகளுக்கு வடபுறமாகப் பயணம் செய்து பெயர் அறியப்படாத சிகரத்தைத் தொட்டனர். அதற்கு, "இந்தியச் சிகரம்" என்றும் பெயரிடப்பட்டது.
இந்தியக் கடற்படையின் இதுபோன்ற சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
பொதுவாகக் கடற்படைகளை நிறங்களின் அடிப்படையில்,
1. பழுப்பு நிற நீர்ப் படை ( கடலோரம் - Brown Water Force )
2. பச்சை நிற நீர்ப் படை ( அதிக தூரம் செல்லக்கூடியவை - ( Green Water Force )
3. நீல நிற நீர்ப் படை ( மிக அதிக தூரம் செல்லக்கூடியவை - ( Blue Water Force )என்று கூறுவர்.
இப்போது, நம் கடற்படையும் பழுப்பு நிற நீர்ப் படையிலிருந்து நீல நிற நீர்ப் படையாக வலுப்பெற்றுள்ளது. அதாவது, நம் படை இந்தியக் கடற்கரையிலிருந்து வெகுதொலைவுக்குச் செல்லும்போது அதற்குத் தேவையான எரிபொருளை வானிலிருந்தபடியே நிரப்பிக்கொள்ளும் வசதியினைப் பெற்றுள்ளது. வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே இவ்வசதி உண்டு. இத்தகு சிறப்பினைப் பெற ஒருங்கிணைந்த தளவாடங்கள், காண்காணிப்பு, இணையதள வசதிகள் தேவை. மேலும், இச்சிறப்பினால், நாட்டின் பாதுகாப்புத் தேவைக்காக மட்டுமன்றி, தேசியக் குறிக்கோள்களுக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நம் கடற்படையின் திறன் கூட்டுதல், புதியன இணைத்தல் ஆகிய முயற்சிகளால் விரைவில், " நீல-நீர்க் கடற்படை"யாக மாறிவிடும். இதனால், கடல் சார்ந்த நம் நாட்டின் பாதுகாப்பானது மேலும் பலம் பெற்றதாக, சக்தி மிக்கதாக ஆகிவிடும். உலகின் சிறந்த 'கடற்படை கொண்ட நாடு, இந்தியா" என்னும் புகழையும் ஈட்டிவிடும்.
இந்தியக் கடற்படையில் சிறப்பாகப் பணியாற்றிய குலாப் ஹிரானந்தனி, டொனால்டு எல். பெர்லின், ராகுல் ராய் சௌத்ரி, அட்மிரல் மிஹிர் கே. ராய், ரியர் அட்மிரல் சத்யிந்திர சிங் ஆகியோர் எழுதிய நூல்களின் வழியாக, 'இந்தியக் கடற்படை' சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறெல்லாம் சிறப்பாகப் பணியாற்றி வரும் .... ... இல்லை இல்லை .... நம் நாட்டைப் பாதுகாத்து வரும் இந்தியக் கடற்படையினர்க்கு நல்வணக்கம் செலுத்தி, நன்றி கூறுவோம். இந்நாளில் அவர்களின் திறமிகு செயல்பாடுகளைப் பெருமையுடன் நினைவுகூர்வோம்.
கருத்துகள்






Good information
பதிலளிநீக்குமிக்க நன்றி !
பதிலளிநீக்கு