கொடி நாள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தனி மனிதன் ஒவ்வொருவனும் உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படைத் தேவைகளை முதலில் செய்து கொள்கிறான். அதன்பிறகு குடும்பத்தின் முன்னேற்றம், பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி, ஆயுள் காப்பீடுகள் என்று மேலும் மேலும் ஒவ்வொரு தேவைக்காக ஓடிக் கொண்டிருக்கிறான். பொதுநலம் மற்றும் சூழல் சார்ந்த செயல்களில் ஈடுபடுகிறான் எனினும் தான் சார்ந்த தேவைகளே முதன்மையாக உள்ளன. ஆனால் பாருங்கள்! நாட்டுக்காக...நம் இந்தியத் திருநாட்டுக்காகப் பாடுபடுவோரை......
மன்னர்கள் ஆண்ட காலத்தில் நால்வகைப் படைகளைக் கொண்டு தம் ஆட்சி எல்லைகளை விரிவுபடுத்திப் பெருமை பெற்றனர். மக்களின் பாதுகாப்பு என்று இருப்பினும் வீரத்தைக் காட்டிடவும் படைபலத்தைக் காட்டிடவும் போரிட்டு தாம் ஆளுகின்ற நாட்டின் எல்லையை மேலும் விரிவுபடுத்துதல், இதன் மூலம் தம் பெயரை நிலைநிறுத்துதல் என்று வாழ்ந்தனர். வந்த போரையும் எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி பெற்று வரலாற்றில் பெயர் கொண்டனர்.
இன்று இந்தியா ஒரு குடியரசு நாடு. நாம் யாருடனும் போருக்குச் செல்லப் போவதில்லை. எனினும், ஒரு நாடு என்னும்பொழுது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதுகாப்பை வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கென்றே உருவாக்கப்பட்டது தான் முப்படை என்னும் அமைப்பு. இதில் தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை ஆகியன உள்ளன. ஒவ்வொன்றும் தமக்கென்று கடமைகளையும் நோக்கங்களையும் கொண்டு செயல்படுகின்றது.
இந்தியத் தரைப்படை
நமது இந்தியத் தரைப்படை முப்படைகளின் மிகப் பெரிய பிரிவாக உள்ளது. உலக அளவில் இரண்டாவது மிகப் பெரிய படையாக இருக்கின்றது எனில் இதன் சிறப்பு பாராட்டிற்குரியது தானே!
நோக்கம் : நம் நாட்டின் எல்லைகளைக் கண்காணித்தல், உள்நாட்டுப் பாதுகாத்தல், நாட்டின் அமைதியை நிலைநாட்டுதல், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து நின்று நாட்டைக் காத்தல் மற்றும் இயற்கைப்பேரிடரின்பொழுது மீட்புப் பணிகளில் ஈடுபடுதல்.
இந்தியக் கடற்படை
நோக்கம் : நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாத்தல்.
துறைமுகங்களைப் பார்வையிட்டுப் பாதுகாத்தல். மற்றும் பிறநாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துதல்.
இந்திய வான் படை
நோக்கம் : நாட்டின் வான் எல்லையைப் பாதுகாத்தல்.
மேலும், எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாத்தல்.
இவற்றைத் தவிர இந்தியக் கடலோரக் காவல் படை, துணை இராணுவப் படையும் உள்ளன.
தன் குடும்பத்திற்காகப் பாடுபடும் தனியொருவனை நாம் பாராட்டுகின்றோம் எனில், நம் இந்தியத் திருநாட்டின் நலன்களைக் காத்திடும் நம்மைக் காத்திடும் மேலே கண்ட முப்படையினரைப் பாராட்டுவது மிகவும் சரியாகும். ஆம்! அவர்களின் சொற்களில் வடிக்க இயலாத அளவிலான பணிகளையும் உடல் மற்றும் உயிர்த் தியாகத்தையும் போற்றி வணங்கிடவே 'கொடி நாள்' கொண்டாடப்படுகிறது. இதனை, 1949 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நான்காம் தேதியன்று நாடே கொண்டாடுகிறது.
இந்தக் கொடிநாள் விற்பனைக்கான ( தேசியக் கொடியை அன்று, மேலே நாம் காணும் கொடி ) நிதி வழங்குமாறு நம் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்து அதன் மூலம் பெறப்படுகின்ற நிதி, நன்கொடை ஆகியன படைவீரரின் குடும்ப நல்வாழ்க்கைக்காக வழங்கப்படுகிறது. மேலும் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்காகவும் ஒதுக்கி வழங்கப்படுகிறது. உயிரிழந்த வீரரின் மனைவி மற்றும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவற்றிற்கும் வழங்கப்படுகிறது.
எப்படை வீரர்களும் வெயில், மழை, குளிர், கடும்பனி, காடு, மலை, பேரிடர் என்று பாராமல் .... இரவுபகல் என்று பாராமல் .... தம் குடும்பம் பற்றிய நினைவு பாராமல் நாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு தங்கள் பணியைச் செவ்வனே ஆற்றி வருகின்றனர். இந்த நாளில் படைவீரர்களின் மிக உயர்ந்த சேவையை நினைவுகூர்வோம்; நம்மால் இயன்ற நிதியினை வழங்கி உதவுவோம்.




கருத்துகள்
கருத்துரையிடுக