நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சுப்பிரமணிய பாரதியார்
நாம் நினைப்பதை, சமுதாயத்தில் நடப்பதை அப்படியே எழுத்துகளில் கொண்டு வருவது என்பது மிகவும் கடினம்! ஆனால், கவிஞர் ஒருவரால் மட்டுமே இயலும். அவர்களுள்ளும் பாரதியாரின் கவிதைகள்..நம்மைச் சிந்திக்கத் தூண்டுவன;
மீசைக்கவிஞர், முண்டாசுக் கவிஞர் என்றெல்லாம் மிக எளிதில் அறிந்திடச் செய்கிற தோற்றம் கொண்டவர்! புறத் தோற்றம் முக்கியம்தான் என்றாலும் அதைவிட அகத் தோற்றமே முக்கியம் என்று வாழ்ந்து காட்டியவர்! ஆம்!
"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" என்று பிறருக்குச் சொல்லியதுடன் தாமும் அதுபோன்றே சான்றாக வாழ்ந்து காட்டியவர்!
இப்பொழுதெல்லாம் புனைபெயர் வைத்துக் கொள்பவர் தம்மைப் பிறருக்கு அடையாளம் காட்டுவதற்காக, பிறரைக் கவர்வதற்காக என்று பல உள்ளன. ஆனால் இக்கவி, "ஷெல்லிதாசன்" என்று புனைபெயரிட்டுக் கொண்டு ஷெல்லியைப் போன்று கவி வடிவத்தில் ஆனால், தமது சுயமான புதிய புதிய சிந்தனைகளுடன் கவிப்பெருக்கு எடுத்தவர்!
ஆனந்தச் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று உற்சாகத்துடன் பாடிய தீர்க்கதரிசி!
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே என்று விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் துணிச்சல் ஊட்டிய வீரக்கவிஞர்!
ஐம்பொறி ஆட்சி கொள்! என்று புதிய ஆத்திச்சூடி பாடிய 'பொறி'க் கவிஞர்!
"பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்"
என்று காப்பியம் படைத்த 'நாடகக்கலை'க் கவிஞர்!
'உயிர்களிடத்து அன்பு வேணும்; தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும்' என்று குழந்தைகளின் மூலம் பெரியவர்களுக்கும் 'அன்பு' உணர்த்திட்ட 'நல்வழி'க் கவிஞர்!
'வெள்ளிப்பனிமலையின் மீதுலவுவோம் அடிமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்' என்று துள்ளிட்ட 'நாட்டுப் பற்று'க் கவிஞர்!
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணேம்' என்று பன்மொழி அறிந்திடினும் 'தமிழ் மொழி'ப் பற்றுக் கவிஞர்.
'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று பிறமொழி இலக்கியங்களில் தேடல் வேட்டை நடத்திடத் தூண்டிய 'மொழிபெயர்ப்புக் கலை'க் கவிஞர்!
இவற்றுடன் கிறித்தவம் இசுலாம் என்று பல்சமயம் பாடிய கவிஞர், தமிழாசிரியர், பத்திரிகை ஆசிரியர் என்றெல்லாம் பல துறைகளிலும் தன் திறமைகளை நாட்டிட்ட 'பன்முக'த் திறமையாளர்!
‘வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்னும் சொற்களின் மூலம் மண்ணில் வீழ்ந்தாலும் நம் மனமென்னும் வானில் இன்றும் நிலைத்து நின்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கொடுத்த சிந்தனைகளில் சிலவற்றையாவது பின்பற்றி வாழ்வோம்!
உங்கள் கருத்துகளைக் கீழே உள்ள பெட்டியில் தெரிவியுங்கள்; நன்றி!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக