சிறுகதை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
என்னைக் கவர்ந்த எழுத்துகள்
இப்பகுதியில், என்னைக் கவர்ந்த எழுத்துகளாகப் பிற எழுத்தாளர்களின் சிறுகதைகள், தகவல்கள், சிந்தனைகள், விழிப்புணர்வுகள் அமைகின்றன. அவர்களின் எழுத்துகளையும் இரசிப்போம் ....!பகிர்வோம்....! மகிழ்வோம்....!
அம்மா வீடு!
துணிந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டாளே தவிர, பூங்கொடிக்கு ஏனோ மனசு தவித்துக் கொண்டுதான் இருந்தது. மருமகளிடம் சிரிக்கத் தெரிந்த மாமியார், 75 வயதிலும் உழைக்கத் தயங்காமல் வேலைக்கு கிளம்பி விடும் மாமனார், அம்மா வீட்டுக்குப் போய் வரவேண்டும் என்று சொன்னாலே அலுத்துக் கொள்கிற கணவர்களுக்கு மத்தியில் எதுவும் சொல்லாமல் அனுமதிக்கும் கணவன். பூங்கொடி மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். இருந்தாலும் எல்லாப் பெண்களையும் போல 'அம்மா வீடு' என்ற ஏக்கம் அவ்வப்போது தொற்றிக் கொள்ளும்.
இப்போதும் அப்படித்தான் கிளம்பி விட்டாள். குழந்தை பிறந்து அம்மா வீட்டில் அறுபது நாட்கள் இருந்தாள். அதற்குப் பிறகு ஒரு வருடத்திற்குப் பிறகு, இப்போதுதான் போகிறாள். போதாக்குறைக்கு அலுவலக வேலை வேறு அவளை அங்கு இங்கு நகர விடவில்லை. சனி ஞாயிறு வந்துவிட்டாலோ வார நாட்களில் நின்று போன வீட்டு வேலைகள் வரிசையில் வந்து பயமுறுத்தும். ஒவ்வொரு முறையும் போன் பண்ணும்போது அம்மா திட்டுவாள், கொஞ்ச நாள் வருந்தினாள். பிறகு அம்மாவுக்கும் பழகிவிட்டது. பூங்கொடிக்கும் பழகிவிட்டது.
எல்லாவற்றையும் தாண்டி மிதித்துக் கொண்டு இன்று போன் கூடப் பண்ணாமல் புறப்பட்டு விட்டாள். திடீரென்று போய் நின்று எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி தரவேண்டும். இருக்கப் போகும் இரண்டு நாளில் அப்பா-அம்மா, அண்ணா, அண்ணி அவர்களின் குழந்தைகள் என ஒவ்வொருவரிடமும் பேசிச் சிரிக்க வேண்டிய விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு வருஷமாகப் போகாமல் இருந்தவளுக்கு இந்த ஒரு மணிநேர பயணம் யுகமாகத் தோன்றியது. டிரைவர் மேல் காரணமில்லாத கோபம் வந்தது. அப்பாடா...! ஒரு வழியாக அவள் இறங்க வேண்டிய ஸ்டாப்பிற்கு வந்து சேர்ந்தது. ஊரே மாறியிருந்தது. நிறைய புதிய கடைகள் முளைத்திருந்தன. பார்த்துப் பார்த்து ஸ்வீட், காரம், பிஸ்கட், பழம் என்று வாங்கிப் பையை நிறைத்துக் கொண்டாள். பத்து நிமிடம் நடக்கும் தூரம்தான் என்றாலும் ஆட்டோ பிடித்தாள்.
இரண்டு நிமிட ஆட்டோ பயணத்தில் ஒரு ஒத்திகை பார்த்துக் கொண்டாள். ஆட்டோ சத்தம் கேட்டு யார் முதலில் வெளியே எட்டிப் பார்ப்பார்கள். என்ன பேசுவார்கள். பதிலுக்கு என்ன பேச வேண்டும் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் எந்த வீடுன்னு சொல்லும்மா என்று ஆட்டோ டிரைவர் யோசனையைக் கலைத்தார்.
அடையாளம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசல் வந்து விட்டது. அவள் ஒத்திகைப்படி யாரும் எட்டிப் பார்க்கவோ ஓடி வரவோ இல்லை. ஏமாற்றம் எட்டிப் பார்த்தாலும் பையனைக் கையில் பிடித்துக் கொண்டு காலிங் பெல்லை அழுத்தினாள். கொஞ்ச நேரம் கழித்து அம்மா கதவைத் திறந்தாள். முன் அறையிலிருந்த கட்டிலில் அப்பா படுத்திருந்தார். தள்ளாடித் தள்ளாடி நடந்து போன அம்மா தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். ரொம்பத்தான் தளர்ந்து போயிருந்தாள்.
"அண்ணி எங்கம்மா?"
"இருந்திருந்து இன்னிக்குத் தானடி, குழந்தைகளை அழைச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. அவளும்தான் எங்க போறா வர்றா ...நான்தான் நாலுநாள் போய் இருந்துட்டு வாடியம்மான்னு அனுப்பிச்சேன்".
பூங்கொடிக்குத் தலை சுழன்றது.
முனைவர் வி. அநுராதா,
வாலாஜாப்பேட்டை.
( தினமலர், பெண்கள் மலர், ஜூலை 17, 2004. )
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக