உப்புச் சத்தியாக்கிரகம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உப்புச் சத்தியாக்கிரகம்
இந்தியாவின் சுதந்திரத்துக்கான காந்தியடிகளின் பல போராட்டங்களில் மிகவும் முக்கியமானது, "உப்புச் சத்தியாக்கிரகம்" என்னும் போராட்டம். சாமானியர்களின் வாழ்வில் பிரிட்டிஷார் கை வைத்ததைப் பொறுக்க மாட்டாத காந்தியடிகள் பொங்கி எழுந்தார்; விளைவு, உப்புச் சத்தியாக்கிரகத்தை நடத்தினார்.
இந்தியாவில் வணிகம் செய்ய வந்தவர்கள் நமது இந்தியாவின் வளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டு அவற்றைத் தங்களுக்குச் சாதகமாக்கிட முயன்றனர். விளைவு? அவர்கள் கையில் நாம் அடைபட வேண்டியதாயிற்று! அனால் நம் மகாத்மா காந்தியடிகளோ இதனை விட்டுவிடவில்லை. ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தும் இந்தியாவை விடுதலை அடையச் செய்திடவும் முதலில் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்க நினைத்தார்.
இதற்கிடையில், அரசாங்கம் 1882 இல் உப்புச் சட்டத்தைப் பிறப்பித்தது. அந்தச் சட்டத்தில் என்ன சொல்லப்படுகின்றது என்றால், பிரிட்டிஷார் மட்டுமே இந்தியாவில் உப்பை உற்பத்தி செய்யவும் விற்கவும் முடியும் என்று சட்டம் இயற்றியது. அது மட்டுமன்று, உப்பின் மீது வரியும் விதித்தனர்.
கொஞ்சம் யோசிப்போமே! கடல்நீரை ஆவியாக்குவதன் மூலம் உப்பளங்களில் எளிதாக உப்பைத் தயாரிக்கலாம்; இந்தத் தொழிலில் கடற்கரையோரம் வசிக்கும் பல இந்தியர்கள் தலைமுறையாகத் தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட இதனைப் பிரிட்டிஷார் ஏகபோக உரிமை போன்று சட்டத்தால் அடக்க நினைத்தால் எப்படி?
இதற்கிடையில், ஜனவரி 26 ( 1930 ) இல் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கத் தீர்மானித்தனர். உப்புச் சட்டம் வந்ததால், காந்தியடிகள் இதன்மூலம் நமது போராட்டத்தைத் தொடங்கலாம் என்று நினைத்தார். பல தலைவர்களும் இம்முடிவை எதிர்த்தனர். அதேசமயம், பல தலைவர்கள் நிலவரி மறுப்புச் சட்டம் , இராணுவச் செலவு போன்றவற்றை மேற்கொள்ளலாம் என்றபோதெல்லாம் காந்தியடிகள் மறுத்து, " உப்பு ஒவ்வொரு இந்தியராலும் பயன்படுத்தப்படுகிறது; அரசின் வருமானத்தில் சுமார் ஒன்பது சதவிகிதப் பங்கு உள்ளது. மேலும், காற்று, நீர் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக உப்பு வாழ்க்கையின் மிக அடிப்படையான தேவையாக உள்ளது. ஏழ்மையிலும் ஏழ்மையில் உள்ள இந்தியர்களைப் பாதிக்கிறது. ஆனாலும், காந்தியடிகள், "இச்சட்டம் சமூக, பொருளாதாரம் என்பனவற்றைத் தாண்டி அனைத்து நிலை மக்களையும் பாதிப்பதால் உடனடியாக இதனை எதிர்க்கவேண்டும்" என்று கூறினார்.
அத்துடன், தனது ஆதரவாளர்கள் சுமார் 78 பேருடன் மார்ச்சு 12 ( 1930 ) ஆம் நாளன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத்தின் சின்ன கிராமமான தண்டிக்கு நடைப்பயணம் மேற்கொண்டார். 24 நாள்கள், 240 மைல்கள் . ( 385 கி. மீ. ) ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அனைவரும் வெள்ளை நிறக் கதராடையை அணிந்து புறப்பட்டனர். அதேசமயம், இந்த நடைப்பயணத்தை 'தண்டி யாத்திரை என்றும் உப்புச் சத்தியாக்கிரகம்' என்றும் அழைத்தனர். அதை விடச் சிறப்பாக. ' பாயும் வெள்ளை நதி' என்று குறிப்பிட்டனர்.
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் அவர்களைச் சமமாகப் பாதித்த ஒன்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தவும் தண்டி யாத்திரையைத் தொடங்கினார். ( என்று Ackerman & DuVall, P. 83 தெரிவிக்கிறது ) இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அளவு இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இருந்தது. இதில் சிறப்பு என்னவென்றால் பெண்கள் முதல்முறையாக அணிஅணியாக வந்து கலந்து கொண்டனர்;
செல்லும் வழியில் சுமார் 48 கிராமங்கள் இருந்தன; ஒவ்வொரு நாள் இரவும் கிராமத்தை அடைந்தவுடன் காந்தியடிகள் உரையாற்றுவார்; கேட்பதற்கு மக்கள் ஆர்வமுடன் கூடியிருந்தனர்.
1930, ஏப்ரல் 6 ஆம் நாளன்று தண்டியை அடைந்த காந்தியடிகள் சுத்திகரிக்கப்படாத உப்பைத் தம் கைநிறைய அள்ளியதுடன், "இதன்மூலம் பிரிட்டிஷ் பேரரசின் அடித்தளத்தை நான் அசைக்கிறேன்" என்று முழங்கினார்.
மேலும், "எங்கு வசதியாக இருக்கிறதோ அங்கு தயாரிக்குமாறும் சட்டத்தை மீறி ஆனால் தேவையான உப்பு எடுப்பதையும் "பரிந்துரைத்தார்.
வறுமையில் வாடும் நமது மக்கள் இவ்வளவு பெரிய செலவுகளைத் தாங்கமாட்டார்கள். இதுதான் நிலைமையெனில், அது நீதிபதி பதவியானாலும் அல்லது ஒரு கடைநிலை ஊழியனானாலும், அரசாங்க வேலைக்கு நாம் நல்வணக்கம் கூறி விடைபெறும் அளவிற்கு நாம் உணர்வுடையவர்கள்தாம். அரசுடன் எந்த வகையிலும் ஒத்துழைப்பு நல்கும் எந்த ஒருவரும் அதாவது, வரிகளைச் செலுத்துவதாயிருந்தாலும், அரசு மரியாதைகளை ஏற்பதாயிருந்தாலும், குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவதாயிருந்தாலும், அனைவரும் அரசாங்கத்திற்கான ஒத்துழைப்பிலிருந்து விலகுக. இதை எனது கோயிலாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். சிறைச்சாலைக்கோ அல்லது யாத்திரைக்கோ செல்வதற்கு முன்னால் இந்தச் செய்தியைத் தான் நான் உங்களுக்கு அளிக்க விரும்பினேன். நாளைக் காலை என்னைக் கைது செய்தாலும் நாளை துவங்கும் இந்தப் போரை எக்காரணம் கொண்டும் நிறுத்தவோ, புறக்கணிக்கவோ கூடாது என்று விரும்புகிறேன். நான் நமது போராட்டத்திற்கான நியாயத்திலும் நமது அகிம்சா ஆயுதத்தின் புனிதத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.இந்தப்போராட்டத்தின் ஒருபகுதியான, பிரிட்டிஷாரின் "தராசனா சால்ட் ஒர்க்ஸ்" என்னும் நிறுவனத்தையும் முற்றுகையிட காந்தியடிகள் நினைத்தார். ஆனால் அதற்குள் அவர் கைது செய்யப்பட்டார். எனினும், சரோஜினி நாயுடு போன்றோர் நடத்தினர். அவர்கள் மீது அரசு தாக்குதல் நடத்தியது; இதில் சிலர் மரணமடைந்தனர்; பலர் காயமடைந்தனர்.
அதேநேரம், தமிழ்நாட்டில் ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் நடைப்பயணம் சென்று உப்புச் சட்டத்தை மீறினர். டி. பிரகாசம் மற்றும் கே. நாகேஸ்வர ராவும் மெரினா கடற்கரையில் உப்புச் சத்தியாக்கிரகம் செய்தனர்.
யாத்திரை மேற்கொண்டார் எனினும் உப்பின் மீதான போர் சுமார் ஓராண்டிற்கும் மேல் நீடித்தது. அதன்பிறகு, சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவின் ஒவ்வொரு கடற்கரையிலும் உப்பு விற்கப்பட்டது. இந்த நடைப்பயணத்திற்குப் பிறகு, ஆங்கிலேயரின் அடக்குமுறை மிகவும் கடுமையானது என்றாலும் சுதந்திரப் போராட்டம் மிகப் பெரிய சத்தியாக்கிரகமாக மாறியது என்பதே உண்மை. அந்நியத்துணிகள் மறுக்கப்பட்டன; வனச்சட்டங்கள் மறுக்கப்பட்டன; விவசாயிகள் வரி கொடுக்க மறுத்தனர்; சொல்லப்போனால், நிலங்களையும் பயிர்களையும் இழக்க நேரிட்டது. எது எப்படி இருப்பினும் சட்ட மறுப்பு இயக்கம் இதன் வழியாகத் தொடங்கப்பட்டது; எந்தவகைப் போராட்டமும் தொய்வடையாமல் நடந்தேறின.
இதன்பிறகு இன்னும் பல சம்பவங்கள்! ஆனால், இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டியன பல உள்ளன. "உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்று நம் தமிழ் மொழியில் பழமொழி உள்ளது. அதன்படி, காந்தியடிகள் முதலான தலைவர்கள் மிகவும் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நன்முறையில் காப்பாற்றுவோம்!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்





கருத்துகள்
கருத்துரையிடுக